நீ விசுவாசித்தால் !
கிறிஸ்தவ வாழ்வில் மிக மிக முக்கியமான ஒன்று தான் விசுவாசம். விசுவாசத்தை வேதாகமம் பின்வருமாறு விளக்குகிறது: ” விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது”. ( எபி: 11:1). இக்கட்டுரையில் வார்த்தையில் விசுவாசம் மற்றும் கிரியையில் விசுவாசம் ஆகிய தலைப்புகளில் விசுவாசத்தைக்குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
I. வார்த்தையில் விசுவாசம் :
” விசுவாசத்தினால் உலகங்கள் தேவனுடய வார்த்தையினால் உண்டாக்கபட்டது”. ( எபி :11:3).
ஜீவ்னும் மரணமும் நாவின் அதிகாரத்திலிருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியை புசிப்பார்கள்”. ( நீதி: 18:21)
நாம் பேசுகிற வார்த்தையில் நம்முடைய விசுவாசம் வெளிப்பட வேண்டும். வார்த்தையிலுள்ள விசுவாசத்தின் பலன் குறித்து வேதாகமம் கூறுவதை ஒரு நேர்மறை மற்றும் ஒரு எதிர்மறை (possitive and negative) உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.
அ ) காலேபின் விசுவாச அறிக்கையும் வெற்றியும் :
காலேப் எகிப்தில் இருந்து புறப்படும் போது அவனுக்கு வயது 40. கானானில் வந்து சேரும்போது வயது 85. தேசத்தை பங்கிடும்போது 85 வயதான காலேப் யோசுவாவிடம் எபிரோன் மலை தேசத்தை ஆண்டவருடைய வாக்குத்ததப்படி கேட்டுவாங்கினான். ” அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் இருந்தன. காலேப் விசுவாசத்தோடு கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களை துரத்திவிடுவேன் ” என்றான். ( யோசு: 14:12). அவன் விசுவாச அறிக்கை செய்தது போலவே அந்த வயதிலும் தளராமல் யுத்தம் செய்து எபிரோன் மலை தேசத்தை சுதந்திரமாக்கிக்கொண்டான்; மேன்மை அடை ந்தான். அவனுடைய விசுவாசம் அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது. “ எனக்கு தாரும் … கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களை துரத்திவிடுவேன்” ( யோசு: 14:12) என்று விசுவாச அறிக்கை யிட்டான்; வெற்றியுமடைந்தான்.
ஆ ) பாராக்கின் அவிசுவாசம் :
தெபோரீள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த காலத்தில் , இஸ்ரவேலர் கானானியருக்கு அடிமைகளாக இருந்தனர். கானானிய இரஜாவாகிய யாபீனின் சேனாபதி சிசெரா. அவனுக்கு 900 இருப்பு இரதங்கள் இருந்தன. அவன் இஸ்ரவேலை மிகவும் கொடுமையாக ஒடுக்கினான். இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். தேவன் தெபோராளோடு பேசினார். அவள் பாராக்கை யுத்தத்திற்கு போகும்படி அழைப்பித்தாள். சிசெராவை அவன் கையில் ஒப்புக்கொடுப்பதாக தேவன் வாக்கு பண்ணினார். ( நியா: 4:9). ஆனால் அவனோ தெபோராளோடு , ‘ நீ என்னோடே கூட வந்தால் போவேன் ; என்னோடே கூட வராவிட்டால் போக மாட்டேன் என்றான்‘. அதற்கு அவள்: நான் உன்னோடே கூட நிச்சயமாய் வருவேன். ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்கு கிடையாது. கற்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரியின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி தெபோராள் எழும்பி பாராக்கோடே கூட கேதேசுக்கு போனாள். ( நியா: 4:9)
தேவன் கொடுத்த வாக்குத்தத்தை விசுவாசியாமல் பாராக் ‘ நீ கூட வராவிட்டால் போகமாட்டேன் ‘ என்றான். தேவன் தனக்கு கொடுத்த வாக்குத்தத்ததை விசுவாசியாமல் தெபோராள் தன்னோடு கூட இருப்பதையே பலமாக எண்ணினான். இதனால் அந்த யுத்ததின் வெற்றியித்ன் மேன்மையை அவன் இழக்க வேண்டியதாயிற்று. ‘ போகமாட்டேன்‘ என்ற வார்த்தையால் அவன் அந்த மேன்மையை இழந்து போனான்.
நாமும் காலேப் போன்று வார்த்தயில் விசுவாசமுள்ளவர்களாய் ஆண்டவருக்கென்று பெரிய காரியங்களை சாதிப்போம்.
II. கிரியையில் விசுவாசம் :
“ அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னில்தானே செத்ததாயிருக்கும் ( யாக் :2:17). சகோதரன் ஒருவன் குறைவுபட்டிருக்கும்போது அவனுக்கு உதவாமல் நான் உனக்கு உதவுகிறேன் என்றால் பிரயோஜனமென்ன? ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருப்பது போல கிரியையில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
எபிரேய வாலிபர்களின் விசுவாச கிரியை:
எபிரேய வாலிபர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களிடம் நேபுகாத்நேசர் இராஜா தான் நிறுத்திய பொற்சிலையை வணங்க சொன்ன்போது அவர்கள் , “ நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை விடுவித்தாலும், விடுவிக்காமற்போனாலும் நாங்கள் இந்த சிலையை வணங்குவதில்லை” என்று சவாலிட்டனர். வணங்கவில்லையெனில் அக்கினிசூளையில் போடப்படுவோம் என்று அறிந்திருந்தனர். சிலையை வணங்கவில்லை, அக்கினிசூளையில் போடப்பட்டனர். அவர்களை அக்கினிசூளையில் போடும்படியாக அவர்களை கொண்டுபோன புருஷர் அக்கினியின் கொடுமையினால் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த வாலிபர்கள் முன்று பேரையும் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி காப்பாற்றினார். விளைவு என்னவெனில் அந்த தேசம் முழுவதும் உண்மையான தேவனை அறிந்து கொண்டது. இவ்விதமாய் இரட்சிக்கதக்க வேறொரு தேவன் இல்லையென்று இராஜா பறைசாற்றினான். இவ்வாலிபர் தங்கள் பேச்சில் மட்டுமல்ல தங்கள் செயலிலும் தங்கள் விசுவாசத்தை நிருபித்ததினால் ஒரு தேசம் உண்மையான தேவனை கண்டு கொண்டது.
” மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன். நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை த் தானும் செய்வான். இவைகளைபார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்”.( யோவான் 14 : 12) என்று இயேசு சொன்னார். ” நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்” ( யோவான் 11:40). விசுவாசத்தின் பலனை நாம் காண வேண்டுமெனில் அந்த விசுவாசம் வார்த்தையில் அறிக்கையிடப்பட்டு, கிரியையில் வெளிப்பட வேண்டும். நம்முடைய பேச்சு மற்றும் செயல்களில் விசுவாசம் வெளிப்பட வேண்டும். அப்போது மற்றவர்களும் அதை காண முடியும். எபிரேய வாலிபர்களின் விசுவாசக் கிரியையினால் ஒரு தேசமே உண்மையான தேவனை கண்டுகொண்டது. நம்முடைய விசுவாச அறிக்கையினாலும், கிரியையினாலும் மாணவர்க்கூட்டம் உண்மையான தேவனை காணட்டுமே!
Author note:
Selin Jeba is a national staff. She along with her husband Benalin are based in Varanasi.
right article at the right time for me……
God Bless your spiritual Journey….